Wednesday, October 24, 2012

கவுன்சலிங் - உண்மையில் என்ன...


பலருக்கு மனநோய்க்கான வைத்தியம் என்றாலே அது கவுன்சலிங் தான். ஆனால் அதை ஒரு சர்வரோக நிவாரணிப் போல ஒரு கருத்தும் உள்ளது. அது சரியா? உண்மையில் கவுன்சலிங் என்ன செய்யும்? இந்த பதிவில் பார்ப்போம்....
தமிழர்களின் அகராதியில் மனநல வைத்தியம் என்பதற்கு கவுன்சலிங் என்று எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. எங்கள் பிரிவுக்கு வரும்போது  "கொஞ்ச நாளா ஒரு மாரி இருக்கான் சார்... கொஞ்சம் கவுன்சலிங் கொடுப்பீங்கன்னு கூடி வந்தோம்" என்று சொல்பவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று படித்தவர்களுக்கே சரியான தெளிவில்லாமல் இருப்பதால் கவுன்சலிங் கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஏமாற்றி காசுப்பிடுங்கும் கூட்டத்துக்கு வசதியாக போய்விட்டது. இந்த பதிவில் கவுன்சலிங் என்ற சிகிச்சை முறையின் பயன், பயனின்மை பற்றி சற்றே விரிவாக முடிந்தளவுக்கு எளிதாக சொல்கிறேன்.

மன நோய்களுக்கு சிகிச்சை என்பதே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவானதுதான். அதற்கு முன் மாட்டு மந்தைகளை போல மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் அடைத்து வைக்க மட்டுமே முடிந்திருந்தது. அந்த சூழ்நிலையில்தான் சிக்மண்ட் பிராய்ட் தோன்றினார். அது வரை புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த மனதின் இயக்கத்தை புரிந்துக்கொள்ளவும் அதற்கு விஞ்ஞான சாத்தியமுள்ள விளக்கமொன்றை தந்ததால் பலர் அவரை பின்பற்றத்தொடங்கினார்கள். 1930கள் வாக்கில் அவர் புகழ் உச்சத்தில் இருந்தது. கிட்டத்தட்ட மன நல மருத்துவ உலகின் MGR என்றே அவரை சொல்ல வேண்டும். ஆனால் அந்த சமயத்தில்எதிர்க்கவே முடியாதென்றிருந்த அவரின் கருத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது.  காரணம் ப்ராய்ட் மனிதனின் முயற்சிகளுக்கு ஊக்கம் தருவது செக்ஸ் மட்டுமே என்று கருதினார்.  மனிதர்கள் இயல்பாகவே அழிவு உணர்ச்சிகளை மட்டுமே கொண்டவர்கள் என்ற ப்ராய்டின் கருத்தை பல விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. இது  மனித மனதை அதன் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை  குறுகிய பார்வையுடன் ஆராய்வது என்று கருதினார்கள். ப்ராய்டின் சிகிச்சை முறைக்கு மாற்றாக புது வழி முறைகளை உருவாக்க தொடங்கினர். அவற்றில் கவுன்சலிங் என்ற இந்த வழிமுறையும் ஒன்று.

இதன் அடிப்படை சித்தாந்தம் எந்த ஒரு மனிதனும் தன் வாழ்கையை நல்ல திசையில் கொண்டு செல்லவே எண்ணுகிறான்.ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தவறான முடிவெடுக்கிறான். அந்த தவறுகளின் விளைவாக பிரச்சனைகள் தோன்றும்போது அவனுக்கு அவன் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் ஒரு துணை தேவைப்படுகிறது.  So ஒரு நல்ல கவுன்சலரின் வேலை அவனுக்கு அவன் எடுக்கும் முடிவுகளின் தவறுகளை சுட்டிக்காட்டி அதை எடுக்க தூண்டிய காரணிகளை ஆராய்ந்து தெளிவான முடிவெடுக்க உதவுவதுதான். 

கவுன்சலிங் - உண்மையில் என்ன...

கவுன்சலிங் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொடுத்து கொள்கின்றார்கள். ஆனால் அனைவரும் புரிந்து கொண்ட ஒரே விஷயம் - கவுன்சலிங் ஒரு பேச்சு வைத்தியம் (TALK THERAPY). இதை ஏன் சொல்கிறேன் என்றால் மருத்துவராயில்லாத சிலர் கவுன்சலிங் தருகிறேன் என்று கிளினிக் ஆரம்பித்து விட்டு மனநல மருந்துகளை எழுதிக்கொடுக்கின்றனர்.  மருந்துகளின் செயல்பாடறியாத இவர்கள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிட்டால் உடலுக்கு கேடு வருவதுதான் மிச்சம். அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் Consult செய்பவர் மனநல மருத்துவர் (PSYCHIATRIST)  அல்லாத பட்சத்தில் கவுன்சலிங் பேர்வழிகள் எழுதி தரும் மருந்துகளை சாப்பிடாதீர்கள்...

சரி விஷயத்துக்கு வருவோம்... கவுன்சலிங் என்பது பேச்சு வைத்தியம் என்று சொன்னேன்... அதில் என்னதான் செய்ய வேண்டும்...

வேற என்ன... பேசத்தான் வேணும்!!!....

அடப்போய்யா... அதுக்கேதுக்கு கூட்டிட்டு வரணும்... அதான் வீட்லயே நாங்க நிறையா அட்வைஸ் பண்ணிட்டோமே என்று சொல்லும் முன் பொறுங்கள்... 

அட்வைஸ் என்பது வேறு... கவுன்சலிங் வேறு...

கவுன்சலிங் செய்வதின் அடிப்படையே நம்பிக்கைதான்... "நீயும் என்னை போல் ஒரு மனிதன்... ஒரு சூழ்நிலை காரணமாக உனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சமாளிக்க உன்னால் முடியவில்லை... அதனால் நீ குறைச்சல்... நான் உன்னை விட உசத்தி.. எனக்கு உன்னை விட அதிகம் தெரியும் என்று நான் நினைக்கவில்லை... உன்னால் உன் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்... அந்த நம்பிக்கையோடே உன்னை பார்க்கிறேன்..." என்று அணுகுவதே சரியான கவுன்சலிங்... அதாவது நம்மை அணுகுபவர்களுக்காக முடிவுகளை நாம் எடுக்காமல் அவர்கள் எடுக்க உதவி செய்வதே கவுன்சலிங்... முடிவை நாம் எடுத்தால் அது அட்வைஸ்...

உதாரணமாக... ஒரு கான்சர் நோயாளியிடம் "தோ.. பாரு... ஏற்கனவே சிகரெட் பிடிச்சு பிடிச்சு நுரையீரல் பாதிச்சுருச்சு... இனியும் குடிச்சா செத்துத்தான் போகணும்... ஒழுங்கா இப்போவே நிறுத்திடு...." என்றால் அது  அட்வைஸ்.... மாறாக அவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கி எது அவனை சிகரெட் பிடிக்க தூண்டுகிறதுதென்று அவன் உணருமாறு செய்து அந்த பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளை உணர செய்து அதன் பின்னும் முடிவெடுக்கும் பொறுப்பை அவனுக்கே விட்டால் அது கவுன்சலிங்....

இதை படிக்கும்போதே உங்களுக்கு தோன்றியிருக்கும்... இப்படியெல்லாம் யார் செய்ய முடியுமென்று... So that brings us to the next question....

 யார் கவுன்சலிங் கொடுக்கலாம்??

அடிப்படை கல்வி தகுதியும், Active listening என்ற தகுதியும், உதவ வேண்டும் என்ற ஆர்வமும்  உள்ள யார் வேண்டுமானாலும் நல்ல கவுன்சலர் ஆகலாம். ஆனால் இதை ஒரு தொழிலாக செய்ய வேண்டுமென்றால் Psychology graduate அல்லது Doctorate  முடித்தவர்களோ Psychiatric Social workerகளோ அல்லது இதற்கென்று certificate courses  உள்ளன - அதை முடித்தவர்களோதான்  நிஜமாகவே கவுன்சலர்களாக பணியாற்ற முடியும். அடுத்த முறை இது போன்று கவுன்சலிங் கொடுப்பவர்கள் யாரையும் அணுகினால் அவர்களின் கல்வித்தகுதியை தெரிந்துக்கொண்டு அணுகுங்கள். எந்த துறையை விடவும் இதில் போலிகள் அதிகம். No counselling is better than wrong counselling. 

சரி.. படித்தால் மட்டும் ஒருவர் நல்ல கவுன்சலிங் தந்து விட முடியுமா... நல்ல கவுன்சலரின் தகுதிதான் என்ன????

அடுத்த பதிவில் தொடர்கிறேன்...

Saturday, October 20, 2012

கம்பிகளும் தூண்களும்...

வணக்கம்!

சென்ற பதிவில் மனநோய் வருவதற்கான அடிப்படைக்காரணிகளை பார்த்தோம். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் யாருக்கு மனநோய் வருமென்று தீர்மானிக்கும் விஷயங்களைப் பார்ப்போம். இந்த பதிவில் நான் உபயோகித்துள்ள படம் "Stephen Stahl" என்ற விஞ்ஞானி இதை விளக்க பயன்படுத்துவது. எளிமையாக மனநோய் பற்றிய விளக்கங்கள் தருவதில் வல்லுனர். அவருக்கு நன்றி.

மனநோய் வந்தவர்களை சந்திக்கும் போது தவறாமல் கேட்கும் கேள்வி "உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மனநோய் உண்டா?" என்பதே. சில சமயம் ஆமென்று பதில் வரும். பல சமயங்களில் இல்லையென்று பதில் வரும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனநோய் வந்தால் மற்றொருவருக்கும் வருமா... நவீன விஞ்ஞானம் இதற்கென்ன பதில் சொல்கிறது....

பொதுவாக விஞ்ஞானபூர்வமாக எந்த ஒரு நோயும் மரபுரீதியாக வருமென்று சொல்வதற்கு ஒரு கருமுட்டை இரட்டையர்களில் ஒருவருக்கு நோய் வந்தால் மற்றொருவருக்கு நோய் வரும் வாய்ப்பு எவ்வளவு என்பதே ஒரு குறியீடாக கருதப்படுக்கிறது. அதன்படி பார்த்தால் மனநோய்கள் 60சதவீகிதமே மரபு ரீதியாக வர வாய்ப்புள்ளது. அப்படியென்றால் மிச்ச 40% பேருக்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதை விளக்க ஒரு சின்ன உதாரணத்தை பார்ப்போம்.....


மனதை ஒரு தொங்குப்பாலம் போல கற்பனை செய்துக்கொண்டால், அதை தாங்கிப் பிடிக்கும் கம்பிகளே நமக்கு மரபு வழியாக வரும் நரம்பியல் அமைப்புகள். அந்த பாலத்தை கடக்கும் வாகனங்களே நம் வாழ்வில் நம்மை தாண்டும் பிரச்சனைகள். கம்பிகள் பலமாய் இருந்தால் சிறிய வாகனங்களும் (பிரச்சனைகளும் ) கடக்கலாம், பெரிய வாகனங்களும் கடக்கலாம். மனநோய் வரும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த கம்பிகள் (நரம்பியல் அமைப்புகள்) பலமற்று இருக்கின்றன. அவை எந்த அளவுக்கு பலமற்று இருக்கின்றன என்பதைப் பொருத்து எப்போது மனநோய் வருமென்று தீர்மானமாகிறது. சில கம்பிகளே பலமில்லாமல் இருக்கின்றன என்றால் அந்த பாலம் சிறிய வாகனங்களை தாங்கும். ஆனால் பெரிய வாகனங்கள் கடக்கும்போது உடையும். அதே பல கம்பிகள் உளுத்துப்போயிருந்தால் சின்ன வாகனம் கூடக் கடக்கமுடியாது.இது போலவே சிலர் சின்னப்பிரச்னையை கூட  எதிர்க்கொள்ள முடியாமல் மனநோய் வாய்ப்படுக்கின்றனர்.சிலரோ தாங்கமுடியாத பிரச்சனைகள் வரும்போதே நோயாளிகள் ஆகின்றனர்.

"சரி குடும்பத்துல நிறைய பேருக்கு இருக்கு... ஆனாலும் மனநோய் வராமா இருக்கறவங்க இல்லையா?..." மேலே இருக்கும் படத்தை நன்றாகப் பாருங்கள். அந்த பாலத்தை கம்பிகள் மட்டுமா தாங்கிப்பிடித்துள்ளன??? இருபுறமும் உள்ள தூண்களும் தாங்கியுள்ளதல்லவா... அந்த தூண்களே ஒருவரின் உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான பலம். வரும் பிரச்சனையை பகிர்ந்துக்கொள்ள யாரும் இருந்தாலே பிரச்சனையின் வீரியம் குறையும். அதேப்போல் நமக்கு தோள் கொடுக்கும் குடும்பம், உற்சாகப்படுத்தும் சூழல்கள் எல்லாமே அவசியம்.

மனநோய் வைத்தியம் என்றாலே நம்மில் பலருக்கு கவுன்சலிங்தான். உண்மையில் கவுன்சலிங் என்றால் என்ன? அதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வா? அடுத்தப் பதிவில் பார்ப்போம்...

Wednesday, October 10, 2012

மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்....


வணக்கம்!
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் மனம் திறந்து... மனநலம் பற்றி நிறைய பதிவுகள் பத்திரிக்கை குறிப்புகள் இப்பொழுது வருகின்றன. அவற்றில் சில தற்குறிகள் தரும் விவரங்களைப் படித்து விட்டு கடுப்பாகி ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்து விட்டேன். ஆனால் அதன் பின் எப்படி எதை சொல்லுவது என்று மிகவும் குழம்பிப் போய் பேசாமல் ஒரு பதிவுடன் எஸ்கேப் ஆகிவிடலாமா என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நண்பர்கள் காட்டிய உற்சாகமும் ஆதரவும் இன்று மீண்டும் என்னை பதிவிட வைத்துள்ளது. இனி முடிந்தளவுக்கு வாரம் ஒரு முறையாவது பதிவிட வேண்டுமென்று உத்தேசித்துள்ளேன். இந்த வார பதிவுகளில் ஒரு அடிப்படைக்கேள்வியை பார்ப்போம்....
 மனநோய்கள் ஏன் வருகின்றன???....

மனநோய்கள் – ஒரு எளிய அறிமுகம்....
"ஏதோ வேலைப்பாடு பண்ணிட்டாங்க"
"எல்லாம் Stress தான்"
"Society மாறிடுச்சுல அதான் பிரச்சனை"
"மூளையில ஏதோ பிராப்ளம்... Exacta காரணம் தெரியலை..."

இவையெல்லாம் மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்கள். ஒவ்வொருவரின் படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பதில்கள் வந்தாலும் உண்மையான பதில் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே...
மன நோய் ஏன் ஏற்படுகிறது... ஒரே குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மன நோய் ஏற்படுவதையும் மற்றொருவருக்கு ஏற்படாமல் இருப்பதையும் தீர்மானிப்பது எது?... 50 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்றைய அறிவியல் இந்த கேள்விகளுக்கு சற்றேறக்குறைய தெளிவான பதில்களை வைத்துள்ளது. இந்த பதிவில் அறிவியல் ரீதியான விளக்கங்களை முடிந்தளவுக்கு டெக்னிகல் வார்த்தைகளை தவிர்த்து தர முயற்சிக்கின்றேன்.

ஆதி காலம் தொட்டு இருந்து வரும் ஒரு கேள்வி மனம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? உடம்பிலா... அல்லது அரூபமாய் வேறு எங்காவதா? முதலில் தத்துவரீதியான விவாதமாய் இது இருந்த போது Rene Descartes என்ற அறிஞர் மனம் வேறு உடல் வேறு... என்றார். அந்த நம்பிக்கை 60 வருடங்களுக்கு முன் வரைக் கூட இருந்தது. பிராய்டு காலத்தில் எல்லாம் மனப்பிரச்சனைகள் வரக்காரணம் மூளையில் இருக்கலாம் என்றாலே ஒரு மாதிரி பார்ப்பார்கள். காரணமில்லாமல் இல்லை.CT, MRI போன்ற வசதிகள் இல்லாத அந்த காலத்தில்  மன நோய் கொண்டவரின் மூளையை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பெரிதாய் ஒரு மாற்றமும் தெரியவில்லை. மாரடைப்பு, பக்க வாதம் என்று எல்லா  நோய்களும் அது தாக்கும் உறுப்பை பாதிக்கின்றன. அது போல் வெளிப்புற தோற்றத்தில் (Morphology) எதுவும் தெரியாத போது எப்படி மனம் மூளையில் உள்ளது என்றால் ஒப்புக்கொள்ள முடியும்???? 1950களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பித்தது.

1952 - உலகில் முதல் முறையாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் மன நோய்க்கு ஒரு மருந்தை கண்டுப்பிடித்தனர். அதன் பெயர் - Chlorpromazine. அதற்கு முன்னும் பல மருந்துகள் இருந்தாலும் இதன் வித்தியாசம் என்னவென்றால் முழுவதும் சுயத்தை இழந்து சமூகத்துக்கும் தனக்குமே பாரமாய் வாழ்ந்து வந்த பல தீவிர மன நோயாளிகளைக் கூட இது குணப்படுத்த ஆரம்பித்தது. அது மருத்துவ உலகில் ஒரு புயலை கிளப்ப ஆரம்பித்தது. மன நல மருத்துவம் ஒரு புதிய பாதையில் காலடி எடுத்து வைத்தது.

எப்படி இந்த மருந்து வேளை செய்கிறது என்று ஆராய்ந்ததில் விஞ்ஞானிகள் ஒன்றை கண்டுப்பிடித்தனர். டோபமின் (Dopamine) என்ற மூளையின் ரசாயனம் இந்த மருந்தினால் மாற்றமடைவது தெரிய வந்தது. அத்துடன் ஒரு கேள்வி எழ ஆரம்பித்தது. - மனநோய் வர ஒரு உடல் மாற்றம் காரணமாக இருக்குமென்றால் அதற்கு முன் அளிக்கப்பட்டிருந்த உளவியல் விளக்கங்கள் எல்லாம் உடான்சா.... உடான்ஸ்தான் என்றொரு சாரார் தர்க்கம் செய்து முழுமையாக உளவியல் விளக்கங்களை நிராகரித்தனர். மற்றொரு பக்கமோ உளவியல் வல்லுனர்கள் காலத்தால் நிரூபிக்கப்பட்டு வந்த விளக்கங்கள் என்று சொல்லி சில விளக்கங்களை கை விட மறுத்தனர். இருக்கிற குழப்பம் போதாதென்று மற்றுமொரு தரப்பு விஞ்ஞானிகள் புதிதாய் ஒரு காரணியை கொண்டு வந்தனர் - சமூகம். மனிதன் தனித்தீவில்லை. அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அவன் செயல்களைப் பாதிக்கிறது. அதுவும் அவனுக்கு மனநோய் வரக்காரணம் என்பது அவர்கள் argument. ஒவ்வொரு தரப்பும் அதன் வாதத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்க, அதன் முடிவில் George Engel என்ற விஞ்ஞானி ஒரு பாப்பையாத்தனமான ஒரு தீர்ப்பைக் கூறினார்.
“அட! மூணுமே காரணம்தான்யா!!!”
அதற்கு அவர் தந்த பெயர் – Biopsychosocial theory…
Biological – ஒரு நோய் வரக்காரணமாக இருக்கும் உடலியல் மாற்றங்கள். நரம்புகளின் தொகுப்பே மூளை. அதன் இயக்கமே மனம். இயக்கம் என்று நான் குறிப்பிடுவதில் தான் சூட்சுமம் உள்ளது. மூளை எவ்வாறு இயங்குகிறது. நம் மூளையின் நரம்புகள் ஒன்றோடொன்று தொடர்புக்கொள்ள சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றன. Neurotransmitter எனப்படும் அந்த ரசாயனங்கள் ஒரு நரம்பிலிருந்து மற்றொன்றுக்கு செய்தி எடுத்துச்செல்கின்றன. அவற்றின் அளவில் கூடவோ குறையவோ மாற்றம் ஏற்பட்டால் அதன் விளைவே மனநோய் ஏற்படுகிறது. எந்த ஒரு மன நோய்க்கும் இதுவே அடிப்படை. ஆனால் சில நோய்களில் இது மட்டுமேயன்றி வேறு சில காரணிகளும் இருக்கின்றன.
Psychological – மனநோய் ஏற்படக் காரணம் நரம்பியல் மாற்றங்கள் என்றால் அவை வெளிப்படுவதில் உளவியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மனஅழுத்தம்(Depression) ஏற்பட Serotonin என்ற ரசாயனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன் குறைவினால் ஏற்படும் வருத்தம், நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. இந்த உணர்ச்சிகளோடு தன்னை, உலகை, எதிர்க்காலத்தை அவர்கள் மதிப்பிடும்போது அவை மேலும் அந்த உணர்வுகளை அதிகரிக்க செய்து ஒரு மீள முடியாத சுழற்சியில் தள்ளிவிடுகின்றன. இது போல் சில நோய்களில் உளவியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன
Social – சமுகம் எனும்போது நாடு, இனம் என்று மட்டுமே அர்த்தம கொள்ளக்கூடாது. நம் நண்பர்கள், சொந்தங்கள் ஏன் குடும்ப உறுப்பினர்கள் கூட நம்மை சுற்றியிருக்கும் சமூகம் தான். மனநோய் வந்தவர்களை வெறுத்து ஒதுக்குவது மட்டுமில்லை, அதீதமாய் அவர்களை கவனிப்பதும் அவர்களின் இயல்பான ஒவ்வொரு செய்கைகளுக்கும் அர்த்தம் கற்பித்து பார்ப்பதும் கூட மனநோயை அதிகரிக்கச் செய்யும்.
இந்த Biopsychosocial model மனநோய் என்றில்லை எந்த ஒரு வியாதிக்கும் உண்டு. ஆனால் மனநல மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் இன்னும் சில கேள்விகள் மிஞ்சி இருக்கின்றன - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மனநோயால் பாதிக்கப்படுகிறார். மற்றொருவர் மனநோய் வர எல்லா காரணங்கள் இருந்தும் பாதிக்கப்படுவதில்லை... ஏன்???....

அடுத்தப் பதிவில் பார்ப்போம்....

என்றும் உங்கள் நலம் விரும்பும்
மரு.ஆவுடையப்பன் M.D.,(Psychiatry)